கொலையை நியாயப்படுத்திய மத்திய அமைச்சர்!
டெல்லி: டெல்லி அருகே இத்தாலி நாட்டு நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி கொலை செய்யப்பட்டது நியாயமானதே என்ற ரீதியில் பேசி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ். அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் இத்தாலியைச் சேர்ந்த கிராஸியானோ என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் தலைமை செயலதிகாரியாக இருந்தவர் லலித் கிஷோர் செளத்ரி.
இவர் சில தினங்களுக்கு முன்பு முன்னாள் ஊழியர்களால் இரும்புத் தடிகளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் கருத்து தெரிவிக்கையில், நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்களுக்கும், கான்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கும் ஊதிய முரண்பாடுகள் இருந்துள்ளன. இதனால் அதிருப்தி அடைந்த கான்ட்ராக்ட் தொழிலாளர்கள் இதுபோல நடந்திருக்கலாம்.
நிறுவனங்களின் அதிகாரிகள் ஊழியர்கள் இந்த அளவுக்கு இறங்குவதற்கு வழி ஏற்படுத்தக் கூடாது. கிராஸியானோ கொலை விவகாரத்தில் நிர்வாகத்தின் போக்கைத்தான் குற்றம் சாட்ட வேண்டும். அவர்களின் போக்கால்தான் கொலை செய்யும் அளவுக்கு ஊழியர்கள் கோபமடைந்துள்ளனர்.
நான்காம் நிலை ஊழியர்கள் கான்ட்ராக்ட் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இப்படி பணியமர்த்துபவர்களுக்கு நிர்வாகங்கள் குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட தருவதில்லை.
எனவே கான்ட்ராக்ட் ஊழியர்களிடத்தில் நிர்வாகங்கள் அனுதாபத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார் ஆஸ்கர்.
செளத்ரியின் கொலையை நியாயப்படுத்துவது போல ஆஸ்கர் பேசியிருந்தது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்திய தொழிலக சம்மேளனத்தின் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் ஆஸ்கரின் பேச்சு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அமைச்சரின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது. அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் இப்படி பேசுவது கடும் அதிர்ச்சி தருகிறது.
ஒரு அப்பாவி மனிதர் இறந்திருக்கிறார். அந்த அதிர்ச்சியில் அனைவரும் இருக்கும்போது அமைச்சர் ஒருவர் இப்படிப் பேசியிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும் என்றார்.
பல்வேறு தொழில் நிறுவன அமைப்புகளும் ஆஸ்கர் பெர்னாண்டஸின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.
இதையடுத்து தனது பேச்சுக்கு ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்று மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பேசியது யாரையெல்லாம் புண்படுத்தியிருக்கிறதோ அவர்களிடமெல்லாம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த அத்தியாயத்திற்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்.
நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஏழை மக்களுக்காகத்தான் நான் இருக்கிறேன். அவர்களுக்காக நான் குரல் கொடுக்கிறேன் என்றுதான் நான் கூறியிருந்தேன். கொலையை ஆதரித்து நான் பேசவில்லை.
எனக்குப் பேச உரிமை இல்லையென்றால் இனிமேல் நான் பேச மாட்டேன் என்றார் ஆஸ்கர்.