பொங்கல் முதல் சென்னைக்கு கடல் குடிநீர் விநியோகம்: ஸ்டாலின்
மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி என்ற இடத்தில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 10 கோடி லிட்டர் கடல் குடிநீர் இந்தத் திட்டம் மூலம் சப்ளை செய்யப்படும்.
திட்டப் பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். அப்போது திட்டம் எந்த அளவில்உள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜனவரி 15ம் தேதி பொங்கல் தினத்தன்று பொங்கல் பரிசாக சென்னை மக்களுக்கு கடல் குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து மாதவரம் மற்றும் செங்குன்றம் வரை குடிநீரை கொண்டு செல்லும் குழாய்களை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
அதேபோல மாதவரம் மற்றும் மணலி நீரேற்று நிலையங்கள் வரை குழாய் பதிக்கும் பணியில் 23 ஆயிரத்து 350 மீட்டர் நீளத்தில் தற்போது 20 ஆயிரத்து 614 மீட்டர் நீளத்திற்கு ஆயிரம் மில்லி மீட்டர் விட்டமுள்ள குழாய்கள் பதிக்கப்பட்டு விட்டது.
இதுவரை 80 சதவீத பணிகள் முடிந்து விட்டன. மீதமுள்ள பணிகளும் விரைவில் முடிவடையும். ஜனவரி மாதத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு 15ம் தேதி முதல் குடிநீர் வழங்கப்படும் என்றார் ஸ்டாலின்.
ஸ்பெயினைச் சேர்ந்த பெபீசா நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் ஐவிஆர்சிஎல் நிறுவனம் இத்திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.
25 ஆண்டுகளுக்கு கடல் குடிநீரைப் பெறுவது தொடர்பான ஒப்பந்தத்தை சென்னை மெட்ரோவாட்டர் நிறுவனம், ஐவிஆர்.சிஎல் நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ளது. ஒரு கிலோ லிட்டர் நீரின் விலை ரூ. 48.66 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜவஹர் லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 93 கோடி செலவில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.