அக்.13: கரூரில் கைத்தறி நெசவாளர் மண்டல மாநாடு
கரூர்: கைத்தறி நெசவாளர் மண்டல வளர்ச்சி மாநாடு அக்டோபர் 13ம் தேதி கரூரில் நடைபெறுகிறது.
இது குறித்து அகில இந்திய கைத்தறி நெசவாளர் ஐக்கிய முன்னணி துணைத் தலைவர் பழனிசாமி கூறியதாவது:
டெல்லியில் நடந்த ஐக்கிய நெசவாளர் முன்னணி கூட்டத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கைத்தறி நெசவாளர் மண்டல வளர்ச்சி மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் நெசவாளர்கள் அதிகளிவில் வாழும் பகுதிகளை 4 மண்டலமாக பிரித்து மண்டல மாநாடு நடத்தப்பட உள்ளது. இதன் முதல் மண்டல மாநாடு கரூரில் நடைபெறுகிறது.
நெசவாளர்களின் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 13ம் தேதி கரூரில் முதல் மண்டல மாநாடும், நவம்பர் 2ம் தேதி வேலூரில் இரண்டாவது மண்டல மாநாடும் நடைபெற உள்ளது.
கரூர் மண்டல மாநாட்டில் கரூர், சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த நெசவாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் அகில இந்திய கைத்தறி நெசவாளர் ஐக்கிய முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர் என்றார்.