ராணிப்பேட்டை அருகே மிட்டலின் இரும்பு ஆலை
வேலூர்: பிரபல ஸ்டீல் தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டலின் ஆர்சலெர் மிட்டல் நிறுவனம் தனது ஸ்டீல் உற்பத்தி பிரிவை தமிழகத்தில் தொடங்கியுள்ளது. பூர்வாங்க பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சில மாதங்களில் உற்பத்தி தொடங்கும் என்று தெரிகிறது.
உலகளவில் முன்னணியில் உள்ள ஸ்டீல் நிறுவனம், மிட்டலின் ஆர்சலெர் மிட்டல் குழுமம் ஆகும். ஆர்சலெர் மிட்டல் குழுமம் 60 நாடுகளில் பரந்து விரிந்து செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் மும்பையைச் சேர்ந்த தாம் ஸ்டீல் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து தமிழகத்தில் தனது தொழிற்சாலையை தொடங்கியுள்ளது. அற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன.
ரூ.100 கோடி மதிப்பிலான இரும்பு பொருட்கள் உற்பத்தி பிரிவு தொழிற்சாலை வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே உள்ள ரங்கநாதபுரம் கிராமத்த்தில் அமைக்கப்பட்டு வருகிறது. சிப்காட் பேஸ்-3ல் 24 ஏக்கர் நிலத்தில் கட்டுமானப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன.
கடந்த மார்ச் மாதம் ஆர்சலெர் மிட்டல் நிறுவனத்துக்கு நிலம் வழங்கப்பட்டது. இந்த தொழிற்சாலை சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது. சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மின்சார வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.
அடுத்த சில மாதங்களில் உற்பத்தி பணி தொடங்கும் என்று தெரிகிறது. எர்த் மூவிங் இயந்திரம், கட்டுமான மற்றும் மின் உற்பத்தி உபகரணங்களுக்கு வடிவம் கொடுக்கும் இரும்பு பொருட்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் இதை சாராத தொழில் நிறுவனங்களுக்காக 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆர்சலெர் மிட்டல் நிறுவனத்தின் நுழைவு இந்த பகுதியை தொழில் வளர்ச்சிக்கு முன்னேற்றி செல்லும். வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அப்பகுதி மக்கள் இந்த தொழிற்சாலையை நம்பிக்கையுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
துறைமுகம் போன்ற வசதிகளோடு கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில எல்லையில் தொழிற்சாலை அமைகிறது. தொழிற்சாலைக்கு தேவையான மனித வளம், பொருட்கள் கிடைக்க ஏதுவாக இருக்கும்.
மேலும் தங்க நாற்கர சாலை அமைந்துள்ளதால் போக்குவரத்தும் எளிது போன்ற காரணங்களுக்காக மிட்டல் நிறுவனம் இந்த பகுதியை தேர்வு செய்துள்ளது. மிட்டல் நிறுவத்தைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையை இங்கு அமைக்கும் பணியில் முழுவீச்சில் இறங்கியுள்ளன.