அஞ்சல் துறை தரும் அடையாள அட்டை: சென்னையில் அறிமுகம்
சென்னை: பெயர், விலாசம் உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய அடையாள அட்டையை அக்டோபர் 2வது வாரத்தில் சென்னையில் அறிமுகம் செய்கிறது அஞ்சல் துறை. ரூ.210 செலுத்தி இதை வாங்கிக் கொள்ளலாம்.
இதுகுறித்து சென்னை மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ராமானுஜம் கூறுகையில், அஞ்சல் துறை புதிய முயற்சியாக அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் 2வது வாரத்தில் தொடங்குகிறது.
இந்த அடையாள அட்டையில் அந்த நபரின் பெயர், முகவரி, ரத்த பிரிவு, அடையாள தழும்புகள் உள்ளிட்ட விவரங்களுடன் போட்டோ ஒட்டப்பட்டு இருக்கும்.
லேமினேஷன் செய்யப்பட்டு ஸ்மார்ட் கார்டு அளவில் இந்த போட்டோ அடையாள அட்டை வழங்கப்படும். இதற்கு ரூ.210 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை போஸ்ட் மாஸ்டர்கள் வழங்குவார்கள்.
3 ஆண்டுகள் வரை இதை பயன்படுத்தலாம். முகவரி மாறினால் அடையாள அட்டை ரத்து செய்யப்பட்டு விடும். மீண்டும் புதிதாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
சென்னைக்கு புதிதாக வருபவர்கள், மூத்த குடிமக்கள், வேலை தேடி வருவோர், வேலையில் சேருவோர், காஸ் மற்றும் டெலிபோன் விண்ணப்பிப்போருக்கு இந்த அடையாள அட்டை மிகவும் உதவியாக இருக்கும்.
அடையாள அட்டை வழங்கும் திட்டம் முதலில் சென்னையிலும் பின்னர் மற்ற நகரங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றார்.