பின்லாந்த் மாணவர் வெறி: 10 மாணவர்களை சுட்டு கொன்று தற்கொலை
ஹெல்சிங்கி: பின்லாந்து நாட்டில் உள்ள பள்ளியில் சக மாணவர்கள் 10 பேரை கண்மூடித்தனமாக சுட்டு கொலை செய்த மாணவன் தன்னையும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்லாந்து நாட்டில் கவுகாஜோகி என்ற நகரில் உள்ள பள்ளி ஒன்றில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு படிக்கும் 20 வயது மாணவன் திடீரென்று துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினான்.
சில நிமிடங்கள் நீடித்த இந்த தாக்குதலில் 10 மாணவர்கள் பரிதாபமாக பலியானார்கள். பின்னர், தன்னைத் தானே சுட்டுக்கொண்ட அந்த மாணவனும் பலியானார். இதை பார்த்த மாணவர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த மாணவன் முகமூடி அணிந்து இருந்தான்.
எதனால் இப்படி வெறித்தனமாக மாணவர்களை சுட்டு கொலை செய்தான் என்பது தெரியவில்லை. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.