இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்திற்கு செனட் கமிட்டி ஒப்புதல்!
இதையடுத்து இந்த ஒப்பந்தம் இன்றே அமெரிக்க காங்கிரசுக்கு (நாடாளுமன்றம்) அனுப்பி வைக்கப்பட்டது.
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் அமெரிக்க செனட்டின் அனுமதியை பெற்ற பின்னரே காங்கிரசில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
(வரும் அக்டோபர் 16ம் தேதியுடன் காங்கிரஸ் கூட்டம் முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர் நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கும் வரை காங்கிரஸ் கூடாது.)
ஆனால், அதற்குள் அணு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்து காங்கிரசுக்கு அனுப்பி வைத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென அமெரிக்க நிதிச் சந்தையில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவினால் நிலைமை தலைகீழாக மாறியது. அணு சக்தி ஒப்பந்தம் குறித்த விவாதத்தை ஒத்தி வைத்து விட்டு நாட்டின் முக்கிய பிரச்சனையான நிதி விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க செனட் முடிவு செய்தது.
இதனால் அணு சக்தி ஒப்பந்ததுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இப்போது அமெரிக்காவில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங் முடிந்தால் ஒப்பந்ததில் கையெழுத்திடும் முடிவில் இருக்கிறார். ஆனால், அதற்கான வாய்ப்புகள் குறைந்தன.
இந் நிலையில், செனட் வெளியுறவு விவகார கமிட்டி இன்று இந்திய அணு சக்தி ஒப்பந்தத்தை திடீரென விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது.
மொத்தம் 21 உறுப்பினர்கள் கொண்ட இந்தக் கமிட்டியில் சிறிய விவாதத்துக்குப் பின் இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. அதில், 19 பேர் ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 2 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து செனட் கமிட்டியில் ஒப்பந்தம் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டது.
இதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் உடனடியாக செனட் சபைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அங்கும் நிச்சயம் ஒப்பந்துக்கு ஆதரவாகவே வாக்குகள் விழும் எனத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து அமெரிக்க காங்கிரசில் (நாடாளுமன்றம்) ஒப்பந்தம் மீது விவாதம் நடந்து ஓட்டெடுப்பு நடக்கும். இங்கும் ஒப்பந்தம் வென்றுவிட்டால் இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர்.
இதனால் அதிபர் தேர்தலுக்கு முன்பாகவே வரும் அக்டோபர் 15ம் தேதிக்கு முன்னதாகவே காங்கிரசில் ஒப்பந்தத்துக்கு அனுமதி பெற்று, அதில் கையெழுத்திட்டுவிடுவதில் அதிபர் புஷ் மிகத் தீவிரமாக உள்ளார்.
ஆனால், அமெரிக்க காங்கிரசில் ஒரு ஒப்பந்தம் வைக்கப்பட்டால், அதன்மீது விவாதம் நடத்தி ஓட்டெடுப்பு நடத்த 30 நாள் அவகாசம் தரப்பட வேண்டும். இந்த கால அவகாசத்தை இந்தியாவுக்காக விட்டுத் தர வேண்டும் என புஷ் தரப்பில் காங்கிரஸ் எம்பிக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரசில் இப்போது புஷ்சின் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. ஜனநாயகக் கட்சியிடம் தான் பெரும்பான்மை உள்ளது. எனவே, இந்த கால அவகாசத்தை விட்டுத் தந்து விரைவில் ஓட்டெடுப்பு நடத்த ஜனநாயகக் கட்சியின் ஆதரவு புஷ்சுக்கு கட்டாயம் வேண்டும்.
அதைப் பெறுவதில் இந்தியாவும் முனைப்பு காட்டி வருகிறது. ஜனநாயகக் கட்சியில் உள்ள முக்கிய இந்தியர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்திய வெளியுறவு அதிகாரிகளும் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்களிடம் பேசி வருகின்றனர்.
ஜனநாயகக் கட்சி விட்டுத் தந்தால் 30 நாட்கள் காத்திருப்பு இல்லாமல் அமெரிக்க காங்கிரசில் ஒப்பந்தம் உடனே நிறைவேறலாம். அதன் பின்னர் ஒப்பந்ததி்ல் இரு நாடுகளும் உடனே கையெழுத்திடலாம்.