ரோஜாவுக்கு பேய் ஓட்டிய சிரஞ்சீவி கட்சியினர்
கடந்த மாதம் திருப்பதியில் பிரஜா ராஜ்யம் கட்சியை பதச்துலட்சம் பேரைத் திரட்டி தொடங்கினார் சிரஞ்சீவி. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பலர், இவரது கட்சியில் இணைந்து வருகின்றனர்.
பல்வேறு விமர்சனங்களை சிரஞ்சீவி சந்தித்து வந்தாலும் அவருக்கு மக்களிடையே பெரும் விளம்பரமும், ஆதரவும் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவியும், நடிகையுமான ரோஜா கடந்த சில தினங்களாக சிரஞ்சீவியை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார்.
இதனால் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சித் தொண்டர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.
தங்கள் தலைவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்த ஒரு நடிகை இப்படியெல்லாம் விமர்சித்துப் பேசுவதா என கொதித்துப்போன அவர்கள் ஒரு நூதனப் போராட்டத்தில் இறங்கி ரோஜாவுக்கு பீதியூட்டியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள கோதாவரி சுரங்கம் அருகே நேற்று நூற்றுக்கணக்கான பிரஜா ராஜ்ய கட்சி தொண்டர்கள் குவிந்தனர். பல மாவட்ட பொறுப்பாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.
போராட்டம் இதுதான்: நடிகை ரோஜாவுக்கு, பேய் பிடித்துவிட்டதாகவும், அதனால்தான் கட்டுப்பாடில்லாமல் தாறுமாராகப் பேசி வருகிறார் என்றும் கூறி எலுமிச்சை, தேங்காய் உள்ளிட்ட பொருட்களுடன் மந்திரவாதி ஒருவரை அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்தனர்.
இந்த போராட்டம் அந்தப் பகுதி மக்களை பரபரப்பாக்கியது. பில்லி சூனியம் செய்கிறார்களோ என்று பார்க்க ஏராளமானோர் திரண்டுவிட்டனர்.
இதுகுறித்து நடிகை ரோஜாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே பில்லி, சூனியம், மந்திரவாதிகளை அதிகம் நம்பும் ரோஜா, இதில் கலக்கமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.