புறக்கணிக்கப்படும் தென் தமிழகம்-கிருஷ்ணசாமி
திருச்சி: தமிழகத்தின் தென் மாவட்டங்களை மத்திய அரசும், தமிழக அரசும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. இப்பகுதிகளில் புதிய தொழிற்சாலைகளையோ, கல்வி நிறுவனங்களையோ அமைக்காமல் தொடர்ந்து அவமதித்து வருகின்றனர் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தற்போதைய திமுக ஆட்சியில், 20க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கான திட்டங்களே ஆகும். ஒரு திட்டம் கூட தென் மாவட்டங்களில் அமையவில்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே தென் மாவட்டங்களில் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களோ, தொழில் வளர்ச்சித் திட்டங்களோ, கல்வி நிறுவனங்களோ அமைக்கப்படவில்லை.
தொழில் வளர்ச்சியை அனைத்து மாவட்டங்களுக்கும் சமமான அளவில் பரவச் செய்ய வேண்டும். குறிப்பாக தென் மாவட்டங்களை வளமைப்படுத்த இவை பயன்படுத்தப்பட வேண்டும்.
வெறும் இலவசத் திட்டங்களை மட்டும் அறிவித்துக் கொண்டிருக்காமல், தென் மாவட்டங்களின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், வளர்ச்சித் திட்டங்களை அங்கு கொண்டு செல்வதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
மதுரையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும், அதேபோல திருச்சியிலிருந்து மத்திய மண்டல மாவட்டங்களுக்கும் மின்சார ரயில் போக்குவரத்து நடத்தப்பட வேண்டும். இதற்கான திட்டங்களைத் தீட்டி, போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
இவற்றை வலியுறுத்தி மதுரையில் அக்டோபர் 22ம் தேதியும், நவம்பர் 30ம் தேதி திருச்சியிலும், டிசம்பர் 15ம் தேதி நெல்லையிலும் மாநாடுகளை நடத்தவுள்ளோம் என்றார் கிருஷ்ணசாமி.