பாலாலயம் செய்ததில் உத்தரவு மீறல்: அரசு மீது அவமதிப்பு வழக்கு!
சென்னை: காஞ்சீபுரம் தேவராஜ சுவாமி கோவிலில், உயர்நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்காமல் பாலாலயம் நடத்தப்பட்டுள்ளது என்று கூறி தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காஞ்சீபுரத்தில் உள்ள வடகலை ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய சபா தலைவர் டி.சி.சீனிவாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
காஞ்சீபுரத்தில் உள்ள தேவராஜ சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் தொடர்பாக பாலாலயம் தொடங்குவதற்கு முன்பாக, நன்கொடையாளர்கள் யார் என்பதை கண்டறிந்து திட்ட மதிப்பீடு செய்து அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து, பின்பு அந்த நன்கொடை பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
புனரமைப்பு பணி தொடங்குவதற்கு முன்பாக நன்கொடையாளர் யார் என்று உறுதி செய்யாமலேயே பாலாலயம் செய்ய முயன்றனர். (பாலாலயம் என்பது கும்பாபிஷேகத்தின்போது கருவறையில் உள்ள சுவாமி சிலைகளை அப்புறப்படுத்தி அதை சுத்தம் செய்து மீண்டும் பிரதிஷ்டை செய்யும் சடங்கு)
ஆகவே, இந்த புனரமைப்பு பணிக்கு தடை கேட்டு மனுதாக்கல் செய்தேன். புனரமைப்பு பணி தொடங்கவில்லை என்றும், இந்து சமய அறநிலையத் துறையிடம் முன் அனுமதி பெற்ற பிறகுதான் மத நிறுவன சொத்துக்கள் பாதுகாக்கும் விதிமுறைகள் 11, 12(2), 13 ஆகியவற்றை பின்பற்றியே பாலாலயம் செய்வோம் என்றும் அரசு வக்கீல் உறுதி அளித்தார். அரசு தரப்பு உறுதியை பதிவு செய்து வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது உயர்நீதிமன்றம்.
9.7.2008 அன்று பாலாலயம் செய்து புனரமைப்பு பணிகளை தொடங்கினார்கள். எனக்கும் அழைப்பிதழ் வந்தது. ஏற்கனவே ஐகோர்ட்டு அளித்த உறுதிமொழியை பின்பற்ற வேண்டுமென்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். ஆனால், நன்கொடையாளர் யார் என்று அறியாமலேயே, விதிமுறைகளை பின்பற்றாமல் பாலாலயம் நடத்தப்பட்டது.
நன்கொடையாளர்களை கண்டறிய தவறிவிட்டனர். கோர்ட்டு உத்தரவை மதிக்கவில்லை. நன்கொடையாளர்கள் பட்டியலை தரும்படி 24.7.2008 அன்று கேட்டேன். ஆனால், தரவில்லை.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர், இணை ஆணையாளர், உதவி கமிஷனர் ஆகியோர் விதிமுறைகளை மீறி, கோர்ட்டு உத்தரவை பின்பற்றாமல் பாலாலயம் செய்தது தவறு. ஆகவே, கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின்கீழ் இவர்களை தண்டிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார் சம்பந்தப்பட்ட இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.