அத்வானிக்கு கொலை மிரட்டல்-சட்ட மாணவர் கைது
அத்வானி வருகிற 29ம் தேதி ஷில்லாங் வருகிறார். அங்கு பொதுக் கூட்டத்தில் பேசவுள்ளார். இந்த நிலையில் இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரில் ஷில்லாங்கில் உள்ள சில பத்திரிகைகளுக்கு மிரட்டல் இ மெயில் வந்தது. அதில், அத்வானி ஷில்லாங்வரும்போது கொல்லப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் டாங்குபார் தலைமையில் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். விசாரணை முடுக்கி விடப்பட்டது.
இந்த விசாரணையில், ஷில்லாங் சட்டக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் மொய்னுல் ஹக் (வயது 30) என்பவர்தான் இந்த மிரட்டல் மெயிலை அனுப்பியது என்று தெரிய வந்தது. இதையடுத்து ஹக்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் தான்தான் மிரட்டல் மெயிலை விடுத்தது என்பதை ஹக்கும் ஒத்துக் கொண்டுள்ளார். பல மணி நேர விசாரணைக்குப் பின்னரே ஹக் உண்மையை ஒத்துக் கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை இரவு இந்த மெயில் அனுப்பப்பட்டது. இதையடுத்து அந்த இன்டர்நெட் பார்லரை போலீஸார் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த பார்லரின் உரிமையாளர் உள்ளிட்ட 8 பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஹக் குறித்து தகவல் கிடைத்தது. ஹக் அனுப்பிய மெயிலில், ஷில்லாங் வரும்போது அத்வானியைக் கொல்வோம். அவரது இந்துத்வா கொள்கை நாட்டை பிளவுபடுத்தி விட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் பீல்டு கமாண்டர் வடக்கு கிழக்கு, அலி ஹூசேன் பாதர் என்றும் அதில் கையெழுத்திடப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையினர் மனக் குமுறலுடன் உள்ளனர். எனவேதான் இந்தியன் முஜாஹிதீன் என்ற போலியான பெயரில் இந்த இ மெயில் மிரட்டலை விடுத்தேன் என விசாரணையின்போது அழுது கொண்டே கூறியுள்ளார் ஹக்.
இருப்பினும், ஹக்குக்கு இந்தியன் முஜாஹிதீன் அமைப்புடன் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் தற்போது போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.