சம்பளம் இல்லை-அவதியில் ஆசிரியர்கள்
நெல்லை: நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் அரசு பணி நியமன ஒப்புதல் கிடைக்காமல் சம்பளமும் இல்லாமல் கடந்த 8 ஆண்டுகளாக 17 இடைநிலை ஆசிரியர்கள் அவதிபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம், கீழப்பாவூர், மானூர், அம்பாசமுத்திரம், கடையம், தென்காசி, குருவிகுளம் உட்பட பல சரகங்களில் உள்ள டிடிடிஏ பள்ளிகளில் கடந்த 2001ம் ஆண்டு 42 பேர் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதில் 7 பேர் அரசு பணி கிடைத்து சென்றுவிட்டனர். மீதமுள்ள 35 பேருக்கு சம்பளம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமன ஒப்புதலுடன் சம்பளம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இதுவரை கல்விதுறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து முதல்வரின் தனிப்பிரிவு, கல்விதுறை இயக்குனர் ஆகியோருக்கு பலமுறை மனு அனுப்பினர். ஆனால் அதற்கும் எந்த பதிலும் இல்லை. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதையடுத்து ஆசிரியர்களில் 3 பேர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து இவர்கள் 3 பேருக்கு மட்டும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணி நியமன ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 15 ஆசிரியர்கள் உயர்நீதிமன்றம் சென்று பணி நியமன ஒப்புதல் பெற்றனர்.
ஆனால் நீதிமன்றம் செல்லவும், கல்வித்துறை பார்மலி்ட்டி நடவடிக்கைகளுக்கு பணம் செலவு செய்யும் அளவுக்கு வசதி இல்லாத 17 பேர் செய்வதறியாது உள்ளனர். அரசு முன்வந்து தங்களுக்கு பணி வழங்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.