திமுக எம்எல்ஏ கார் உடைப்பு - காவல் நிலையம் முற்றுகை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரத்தில் இலவச கலர் டிவி வழங்கும் விழாவில் திமுக எம்எல்ஏ சக்ரபாணி கார் பாஜக நிர்வாகியால் அடித்து உடைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரத்திம் அருகே தங்கச்சியம்மாள் பட்டியில் இலவச கலர் டிவி வழங்கும் விழா நடைபெற்றது.
அப்போது 1,566 நபர்களுக்கு இலவச கலர் டிவியை திமுக எம்எல்ஏ சக்ரபாணி வழங்கினார். அப்போது அங்கு வந்த பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் சசிக்குமார் தனக்கும் இலவச கலர் டிவி வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வாதாடினார்.
தகவல் அறிந்த பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். அவர்களுக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. விழாவில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி திமுக எம்எல்ஏ சக்ரபாணியின் காரை சசிக்குமார் அடித்து உடைத்தார். இதில் கார் சேதம் அடைந்தது.
காரை உடைத்த பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் சசிக்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து பாஜக நிர்வாகி மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி அம்பிளிக்கை காவல் நிலையத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.