தொடர்ந்து குண்டுவெடிப்பு: சிவராஜ் பாட்டீலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
டெல்லி: தலைநகர் டெல்லியில் 2வது முறையாக வெடிகுண்டு வெடித்திருப்பது குறித்து சிவராஜ் பாட்டீல் தலை உருளத் தொடங்கியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் செயல்பாட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.
இதுகுறித்து பாஜக தலைவர்களில் ஒருவரான வி.கே.மல்ஹோத்ரா கூறுகையில், நாட்டில் தொடர்ந்து குண்டுவெடிப்புகள் நிகழ்கின்றன. தலைநகர் டெல்லியில் 2வது முறையாக குண்டு வெடித்துள்ளது. இனியும் சிவராஜ் பாட்டீல் உள்துறை அமைச்சர் பொறுப்பில் நீடிக்க கூடாது. அந்த அருகதையை அவர் இழந்து விட்டார்.
உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி தீவிராத தாக்குதல்கள், நாட்டின் பாதுகாப்பு குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
பார்வர்ட் பிளாக் கட்சி தெரிவிக்கையில், தீவிரவாதிகளுக்கு எதிராக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டது.
நாடு முழுவதும் தீவிரவாத தாக்குதலால் பற்றி எரிந்து கொண்டுள்ள நிலையில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடுவதில்தான் அரசு தீவிரமாக உள்ளது என்று அக்கட்சி கூறியுள்ளது.