மிரட்டலுக்கிடையே ஷில்லாங்கில் அத்வானி-தீவிர பாதுகாப்பு
நாடு முழுவதும் சங்கல்ப யாத்திரையை அத்வானி மேற்கொண்டு கூட்டங்களில் பேசி வருகிறார். லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்ட பிரசாரமாக இதை அத்வானி மேற்கொண்டுள்ளார்.
அதன் ஒரு கட்டமாக நேற்று குவஹாத்தியில் அவர் பேசினார். அதை முடித்துக் கொண்டு இன்று அவர் ஷில்லாங் வந்து சேர்ந்தார்.
அத்வானி ஷில்லாங் வந்தால் அவரைக் கொல்லப் போவதாக சில நாட்களுக்கு முன்பு இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் பெயரில் இ மெயில் மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மெயிலை சட்டக் கல்லூரி மாணவர் மொய்னூல் ஹக் என்பவர் கைது செய்யப்பட்டுவிட்டார்.
இந் நிலையில் ஷில்லாங் வந்த அத்வானி, மேகாலயா முதல்வர் டான்குபார் ராய், முன்னாள் லோக்சபா சபாநாயகர் பி.ஏ.சங்மா மற்றும் பாஜக கூட்டணித் தலைவர்களை சந்தித்துப் பேசினார். மேகலாயா சட்டசபையில் பாஜகவுக்கு ஒரே ஒரு எம்.எல்.ஏதான் உள்ளார். இதனால் ஆளுங்கூட்டணிக்கு பாஜக ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் பாஜக அலுவலகத்திற்கான அடிக்கல்லை அவர் நாட்டினார். இன்று பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பல்வேறு மதத் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.
இ-மெயில் மிரட்டலைத் தொடர்ந்து அத்வானி வருகையின்போது பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும் என முதல்வர் ராய் தெரிவித்திருந்தார். அதன்படி அத்வானிக்கும், அவர் கலந்து கொள்ளவுள்ள கூட்டத்துக்கும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியிலிருந்து வந்துள்ள தேசிய பாதுகாப்புப் படை குழுவினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இமெயில் அனுப்பியவர் கைது செய்யப்பட்டு விட்டாலும் கூட பாதுகாப்பு நடவடிக்கையில் அசட்டையாக இருக்க முடியாது என மாநில டிஜிபி தேய் சவைன் தெரிவித்துள்ளார்.