காதலில் விழுந்தேன்: மிரட்டல் வருவதாக தியேட்டர் உரிமையாளர் புகார்
திண்டுக்கல்: காதலில் விழுந்தேன் படம் திரையிட்டது முதல் தனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வருவதாக திண்டுக்கல் தியேட்டர் உரிமையாளர் ஒருவர் புகார் கூறியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள காதலில் விழுந்தேன் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இருப்பினும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இப்படத்தை குறிப்பிட்ட நாளில் திரையிட முடியவில்லை.
மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து படத்தைத் திரையிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் நேற்று முதல்வர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், திண்டுக்கல் சோலைஹால் தியேட்டரில் நேற்று காதலில் விழுந்தேன் திரையிடப்பட்டது. பெரும் திரளான ரசிகர்கள் திரண்டு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்துப் படம் பார்த்தனர்.
இந்த நிலையில் படம் திரையிடப்பட்டது முதலே தனக்கு தொலைபேசி மூலம் பல்வேறு தரப்பிலிருந்தும் மிரட்டல் வருவதாக தியேட்டர் உரிமையாளர் நாகராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.