திருப்பத்தூர் அருகே தடம்புரண்ட ஏலகிரி எக்ஸ்பிரஸ்
திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை- சென்னை இடையிலான ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை தடம் புரண்டது. இருப்பினும் தடம் புரண்ட பெட்டியில் பயணிகள் யாரும் இல்லாததால் காயமேதும் இல்லை.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. காலை 5 மணிக்கு ஜோலார்பேட்டையிலிருந்து கிளம்பி 8 மணியளவில் சென்னையை இது சென்றடையும். மறுமார்க்கத்தில் மாலையில் சென்னையிலிருந்து கிளம்பி ஜோலார்ப்பேட்டை வந்து சேரும்.
இந்த ரயிலில் பெரும்பாலும் அலுவலகத்தில் பணியாற்றுவோர், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களே அதிகம் பயணம் செய்வர். இதனால் ஆபிசர்ஸ் டிரெயின் என்றும் இதற்கு செல்லப் பெயர் உண்டு.
இன்று காலை வழக்கம் போல ரயில் ஜோலார்பேட்டையிலிருந்து கிளம்பியது. திருப்பத்தூர் அருகே வரும்போது திடீரென ரயிலின் என்ஜினும், முதல் பெட்டியும் தண்டவாளத்தை விட்டு இறங்கின. உடனடியாக என்ஜின் டிரைவர் ரயிலை அவசர கால பிரேக்கைப் பயன்படுத்தி நிறுத்தினார்.
அதிர்ஷ்டவசமாக முதல் பெட்டியில் பயணிகள் யாரும் இல்லாததால் காயமோ, உயிர்ச்சேதமோ இல்லை.