ஐசிஐசிஐ குறித்து பெரும் புரளி: நம்ப வேண்டாம்-ஆர்பிஐ
அமெரிக்க நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவால் இந்தியாவிலும் ஒரு வித பதட்டம் காணப்படுகிறது. குறிப்பாக ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட சில வங்கிகள் குறித்து அவ்வப்போது திவால் பீதி கிளம்பி வாடிக்கையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.
இந் நிலையில் ஐசிஐசிஐ வங்கி பெரும் சிக்கலில் இருப்பதாக இன்று மீண்டும் புரளி பரவியுள்ளது. குறிப்பாக இன்று காலை கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் ஐசிஐசிஐ வங்கி குறித்து பெரும் வதந்தி பரவியதால் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம் மையங்களிலும் குவிந்தனர்.
இதைத் தொடர்ந்து காமத் வெளியிட்ட அறிக்கையில், ஐசிஐசிஐ வங்கியின் நிதி நிலை குறித்து தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட இடங்களிலிருந்துதான் இந்த வதந்திகள் கிளம்புகின்றன.
ஆனால் இந்த வதந்திகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை, அவதூறை ஏற்படுத்தும் நோக்கில் வெளியாகும் வதந்திகள் இவை என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஐசிஐசிஐ வங்கி ஸ்திரமுடன் உள்ளதை என்பதை நிரூபிக்கும் வகையிலான தகவல்களையும் காமத் வெளியிட்டுள்ளார்.
- 2007ம் ஆண்டு ஜூன் மாதம் ஐசிஐசிஐ வங்கி ரூ.20 ஆயிரம் கோடி முதலீடுகளுடன் இருந்தது. இது அதன் முதலீட்டை விட இருமடங்கு அதிகமாகும். ரூ. 47 ஆயிரம் கோடி அளவுக்கு பணப்புழக்கத்தில் ஐசிஐசிஐ வங்கி உள்ளது.
- குறைந்தபட்ச கையிருப்பு அளவு 9 சதவீதம்தான். ஆனால் ஐசிஐசிஐ வங்கியிடம் 13.4 சதவீத அளவுக்கு கையிருப்பு உள்ளது. இதன் மூலம் வங்கியின் நிதியிருப்பு மிகவும் ஸ்திரமாக இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
- ஐசிஐசிஐ வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 4 லட்சத்து 84 ஆயிரம் கோடியாகும்.
- ஐசிஐசிஐ வங்கி லாபத்துடன் இயங்கி வருகிறது. வரி போக இதன் லாபத் தொகை ரூ. 4,158 கோடியாகும். இந்த ஆண்டின் முதல் காலிறுதியில் ரூ. 728 கோடி அளவுக்கு லாபம் ஈட்டியுள்ளது என்று காமத் தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ளார்.
ஆர்பிஐ தரும் நம்பிக்கை:
ஐசிஐசி வங்கியின் நிதி நிலைமை வலுவாகவே உள்ளது என்று ரிசர்வ் வங்கியும் தெரிவித்துள்ளது. வதந்திகள் பரவியுள்ளதால் ஏடிஎம் மையங்களிலும், வங்கிக் கிளைகளிலும் பெருமளவிலான வாடிக்கையாளர்கள் குவிந்து பணத்தை எடுத்து வருவதால், நிதி நிலையை சமாளிக்க போதுமான பணத்தை ஐசிஐசிஐ வங்கிக்கு வழங்கியுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.