ஜெ. மீதான வழக்கு-14வது முறை ஒத்திவைப்பு
புவனகிரி: தேர்தல் கமிஷன் சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது பரங்கிப்பேட்டை நீதி மன்றத்தில் போடப்பட்ட வழக்கு விசாரணை 14-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, புவனகிரி ஆகிய 4 தொகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி போட்டியிட மனு தாக்கல் செய்தார்.
இதை எதிர்த்து திமுக எம்.பி. செ. குப்புசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து ஜெயலலிதா மீது தேர்தல் கமிஷன் வழக்கு தொடரலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன் அடிப்படையில் ஜெயலலிதா மீது புவனகிரி தொகுதி தேர்தல் அதிகாரி செல்வமணி பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 2007 ம் ஆண்டு, ஜூன் 9-ம் தேதி வழக்கு தொடர்ந்தார்.
இதை எதிர்த்து ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
ஆகஸ்ட் 29-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது இவ் வழக்கு செப்டம்பர் 29-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி ரமேஷ் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு தடை இருப்பதால், வழக்கை அக்டோபர் 29-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு 14 வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.