நாளை முதல் பொது இடங்களில் புகைபிடிக்க தடை
அமைச்சர் டாக்டர் அன்புமணி தலைமையிலான மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இந்தத் தடையை வித்துள்ளது.
காந்தி ஜெயந்தியான நாளை முதல் நாடு முழுவதும் இந்த சட்டம் கடுமையாக அமலுக்கு வருகிறது.
புகைப்பிடிப்பது குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ விளம்பரம் செய்தல், ஊக்கப்படுத்துதல், புகையிலைப் பொருட்களை கல்வி நிலையங்களுக்கு அருகில் அதாவது 100 மீட்டர் தூரத்திற்குள் விற்பனை, 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பது ஆகியவை தடை செய்யப்படுகிறது.
மக்கள் கூடுகின்ற அரங்கங்கள், திறந்த வெளி அரங்கங்கள், மருத்துவமனைகள், பஸ், ரயில் மற்றும் விமான நிலையங்கள், பிளாட்பாரங்கள், வணிக வளாகங்கள், அலுவலக வளாகங்கள், தியேட்டர்கள், நீதிமன்றம், ஹோட்டல், தங்கும் இடங்கள், சிற்றுண்டி விடுதிகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
சட்டத்தை மீறுவோர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டில் போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் ஆகியோர் இந்த சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளாவார்கள்.
அனைத்து பொது இடங்களிலும் புகை பிடிப்போர் மீது மத்திய மாநில அரசு அதிகாரிகளும், சுகாதாரத்துறை அதிகாரிகள், புகையிலை கட்டுப்பாட்டு நிலைய பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர் நடவடிக்கை எடுப்பார்கள்.
இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளின் கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. இதில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.
புகை பிடிப்போரை தடுக்க மாநில, மாவட்ட, வட்ட, கிராம அளவில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை செயல்படுத்த கோரி அரசுத்துறை செயலாளர்கள், துறை தலைவர்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தை கடுமையாக அமல்படுத்தும்படி அனைத்து மாநில முதல்வர்கள், தலைமை செயலாளர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.