உத்தபுரத்தில் மீண்டும் மோதல்: தடியடி-கண்ணீர் புகை குண்டு வீச்சு
மதுரை: உத்தபுரத்தில் இன்று மீண்டும் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் மோதலில் ஈடுபட்ட மக்களை கலைத்தனர். இதனால் அங்கு மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வகுப்பினர் தங்களது பகுதியில் கட்டிய சுவரால் தலித் மக்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
சில மாதங்களுக்கு முன் இந்த சுவருக்கு எதிராக வெடித்த போராட்டத்தையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு பாதை அமைக்கப்பட்டது.
இந் நிலையில் சமீபத்தில் திருமண விழா தொடர்பாக இரு பிரிவினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. சுவர் இடிக்கப்பட்ட பகுதியில் தலித் மக்கள் பட்டாசுகள் வெடித்ததால், இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
இரு தரப்பினரும் வெடிகுண்டுகளை வீசி தாக்கிக் கொண்டனர். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்த மோதல் தொடர்பாக 128 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களில் 30 பேரை கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை. இதையடுத்து தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் அங்கு மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.