ஆந்திரா முழுவதும் சிரஞ்சீவி கட்சியின் கொடியேற்றம் தொடக்கம்
சிரஞ்சீவி ஆகஸ்ட் மாதம் தனது பிரஜா ராஜ்ஜியம் கட்சியை பிரம்மாண்டமாக தொடங்கினார். கட்சி கொடியேற்றம் மற்றும் உறுப்பினர் சேர்க்கையை தனது கட்சி அலுவலகத்தில் சிரஞ்சீவி தொடங்கி வைத்தார். கட்சி கொடியை ஏற்றி வைத்த சிரஞ்சீவி, முதல் உறுப்பினர் அட்டையை ஊனமுற்ற வாலிபர் பாலகிருஷ்ணா என்பவருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
மாநிலம் முழுவதும் அவரது ஆதரவாளர்களும், நிர்வாகிகளும் கட்சி கொடியை ஏற்றினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி கட்சியின் நிர்வாகிகள், நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் சிரஞ்சீவி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சி சமூக நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று சிரஞ்சீவி கூறினார்.
முன்னதாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ரத்ததான முகாமையும் தொடங்கி வைத்தார். பின்னர் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள கங்கப்பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தனது முதல் அரசியல் பயணமாக தனது 8 நாள் பயணத்தை வரும் விஜயதசமியான 9ம் தேதி தொடங்குகிறார். ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சபுரத்தில் சாலை நிகழ்ச்சி நடத்துகிறார். முன்னதாக அரசவல்லியில் உள்ள சூரிய கோயிலில் வழிபாடு நடத்துகிறார்.
பயணத்தின்போது மக்களின் குறைகளை கேட்டறிவார் என்றும் தேர்தல் அறிக்கை தயாரிக்க கருத்து கேட்பார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.