அணு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க செனட் ஒப்புதல்
மிகப் பெரிய அளவிலான மெஜாரிட்டியுடன் இந்த ஒப்பந்தத்ைத செனட் நிறைவேற்றியுள்ளது. மேலும், இந்தியாவுக்கு பாதகமான பல அம்சங்களைக் கொண்ட திருத்த மசோதாக்களையும் செனட் சபை நிராகரித்து விட்டது.
கடந்த 2005ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக உருவானது இந்த ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தை மிகக் கடுமையாக எதிர்த்த இடதுசாரிகள் அதை மத்திய அரசு ஏற்காததால், அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் விலக்கிக் கொண்டன.
இப்படி இந்தியாவில் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்த இந்த ஒப்பந்தத்திற்கு இருந்து வந்த சர்வதேச அணு சக்தி ஏஜென்சி, என்.எஸ்.ஜி. தடைகள் சமீபத்தில் நீங்கின.
இதையடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு ஒப்பந்தம் அனுப்பப்பட்டது. அங்கும் எதிர்ப்புகள் இருந்தன. இருப்பினும் சில நாட்களுக்கு முன்பு பிரதிநிதிகள் சபை ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில் செனட் சபை இன்று காலை ஒப்பந்தத்திற்கு பெரும்பான்மை ஆதரவுடன் ஒப்புதல் வழங்கியது. ஒப்பந்தத்திற்கு ஆதரவாக 86 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும் கிடைத்தன.
மேலும், இரு ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் கொண்டு வந்த இந்தியாவுக்கு பாதகமான அம்சங்களைக் கொண்ட திருத்தங்களையும் செனட் சபை நிராகரித்து விட்டது.
ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
இரு அவைகளின் ஒப்புதலையும் அணு சக்தி ஒப்பந்தம் பெற்று விட்டதால் அடுத்து அதிபர் புஷ்ஷின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. அவர் ஒப்புதல்க ொடுத்த பின்னர் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர். அதன் பின்னர் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.
விரைவில் இதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் இந்தியா வரவுள்ளார். அவரது வருகையின்போது அவரும், மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர்.
இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினால் உடனடியாக அமெரிக்கா தனது அணு ஒப்பந்தத்தை நிறுத்திக் கொள்ளும் என்ற அம்சம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 ஆண்டுகளாக அலைபாய்ந்து வந்த அணு சக்தி ஒப்பந்தம் தற்போதைய செனட் ஒப்புதல் மூலம் ஒரு வழியாக நடைமுறைக்கு வரும் கட்டத்தை எட்டி விட்டது.