மது ஒழிப்பை வலியுறுத்தி பாமக நடத்திய விதவைகள் பேரணி
சென்னை: மதுக் கொடுமையை விளக்கியும், மது ஒழிப்பை வலியுறுத்தியும் பாமக மகளிர் சங்கம் சார்பில் மதுவால் கணவர்களை இழந்த பெண்கள் வெள்ளைப் புடவை அணிந்து கோட்டை நோக்கி நேற்று பேரணி நடந்தது. டாக்டர் ராமதாஸ் இதற்குத் தலைமை தாங்கினார்.
இந்தப் பேரணியில் பெரும் திரளான பெண்கள் வெள்ளைப் புடவை அணிந்து கலந்து கொண்டனர். சேப்பாக்கத்தில் தொடங்கி மன்றோ சிலையில் முடிவடைந்தது. பேரணிக்கு டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
பின்னர் காந்தி சிலைக்கு விதவைப் பெண்மணி ஒருவர் மாலை அணிவித்தார். பிறகு மது ஒழிப்பு குறித்து காந்தி சிலையிடம் அவர் கோரிக்கை விடுத்தார். அதை மற்ற பெண்கள் திரும்பச் சொன்னார்கள்.
பின்னர் காந்தி சிலை முன்பு பெண்கள் அனைவரும் சாலையில் அமர்ந்தனர். அவர்களுடன் ராமதாஸும், கட்சித் தலைவர் ஜி.கே.மணியும் அமர்ந்து கோஷமிட்டனர்.
பிறகு டாக்டர் ராமதாஸ் பேசுகையில், இந்தியாவிலேயே விதவைகள், அதிலும் இளம் விதவைகள் அதிகம் இருப்பது தமிழகத்தில்தான் என ஒரு ஆய்வு கூறுகிறது. இதற்கு காரணம் சாராயம்.
ஒரு கிராமத்தில் 100 வீடு இருக்கிறது என்றால், அதில் ஒன்றிரண்டு தவிர மற்ற எல்லாமே சாராயத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கணவன், தந்தை, அண்ணன், மாமன், மச்சான் என யாராவது ஒருவன் குடிகாரனாக இருக்கிறான்.
நான்கு தலைமுறையினர் இந்த சாராயத்தால் வீணாகிப் போய் விட்டனர். அதனால்தான் இந்த விதவைக் கோலம். 5வது தலைமுறையும் அப்படி வீணாகி விடக் கூடாது.
இதை அரசியலுக்காக நாங்கள் செய்யவில்லை. ஓட்டுக்காக இதை நடத்தவில்லை. ஓட்டுக்காக நடத்துவது என்றால் மதுக் கடைகளை மூடி விட்டு ஓட்டுக்களை வாங்கிக் கொள்ளுங்களேன்.
குடி இல்லாத, மது இல்லாத உலகம் வேண்டும். மது பெரிய சாத்தான், புகை குட்டி சாத்தான். புகை என்ற குட்டி சாத்தானை எதிர்த்து இந்தியாவே பேசும் அளவுக்கு அமைச்சர் அன்புமணி போராட்டம் நடத்தி வருகிறார். மது வேண்டாம் என்று நாம் போராட்டம் நடத்தி வருகிறோம். இதில் வெற்றி பெறுவோம் என்றார் ராமதாஸ்.