கிறிஸ்தவர்கள் மீது தாக்குதலால் இந்தியாவின் கெளரவத்திற்குப் பாதிப்பு: மன்மோகன் சிங்
டெல்லி: கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் குறித்து வெளிநாட்டு தலைவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை. இந்த சம்பவம் நாட்டின் கௌரவத்தை பாதித்துவிட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் கவலையுடன் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடந்தது. ஒரிஸா, கர்நாடக மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்கா, பிரான்ஸ் பயணத்தின்போது, கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் குறித்த பல சங்கடமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைவரான பிரான்ஸ் நாட்டு அதிபர் சர்கோஸி இந்த தாக்குலை, கிறிஸ்தவர்களுக்கு எதிரான படுகொலை என்று கூறினார். இதன் மூலம் வெளிநாடுகளில் இந்தியாவின் கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனையான ஒன்று என்றார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தரும்படி உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து அமைச்சரவை சிறப்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில், தாக்குதலை நடத்திய பஜ்ரங் தள் போன்ற இந்து அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர்கள் வலியுறுத்தினர். தாக்கதலில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் ஏற்கனவே மத்திய அரசை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.