டாடா வெளியேறக் கூடாது என்று கோரி சிபிஎம் பந்த் - சிங்கூரில் பதட்டம்
கொல்கத்தா: டாடா நிறுவனம் மேற்கு வங்க மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று மேற்கு வங்கத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. சிங்கூரில் பந்த் காரணமாக பதட்டம் நிலவி வருகிறது.
டாடாவின் நானோ ஆலையை மேற்கு வங்கத்தை விட்டு கொண்டு செல்வதாக ரத்தன் டாடா அறிவித்துள்ளார். இதனால் மேற்கு வங்க அரசு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தை விட்டு டாடா நிறுவனம் வெளியேறக் கூடாது என்று வலியுறுத்தி அங்கு இன்று முழு அடைப்புப் போராட்டத்தை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இதையடுத்து இன்று காலை பந்த் தொடங்கியது. சிங்கூரில் 12 மணி நேர பந்த்துக்கு சிபிஎம் அழைப்பு விடுத்திருந்தது.
இதையடுத்து அங்கு பதட்டம் காணப்படுகிறது. துர்காப்பூர் எக்ஸ்பிரஸ் வேயை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தடுத்து டாடா ஆலை தொடர்ந்து இயங்க வேண்டும், அதை திறக்க வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.
அதேபோல ஹவுரா - பர்த்வான் மார்க்கத்தில் கமர்குந்தி ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிங்கூர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. துர்காப்பூர் எக்ஸ்பிரஸ் வேயில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் டயர்களை தீவைத்துக் கொளுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாடா ஆலைக்கு எதிராக செயல்படுபவர்களை எதிர்த்தும் அவர்கள் கோஷமிட்டனர்.
நிலைமை பதட்டமாக இருப்பதாகவும், இருப்பினும் கட்டுக்குள் இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் பொருட்டு மேற்கு வங்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் மூளாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாலை துண்டிப்பு:
தண்டிபாரா என்ற இடத்தில் சாலையை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி துண்டித்துள்ளனர். இதனால் அந்த சாலை வழியாக உள்ள கிராமங்களுக்கும், மாநிலத்தின் இதரப் பகுதிக்குமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ஹூக்ளி மாவட்டத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இன்று மாலை பேரணியும், பொதுக்கூட்டமும் நடத்தப்படும் என சிபிஎம் எம்.பி. ரூப் சந்த் பால் தெரிவித்தார்.
மாநிலத்தின் தொழில் வளர்ச்சியையே முடக்கும் வகையில் மமதா பானர்ஜி செயல்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார். மமதாவுக்கு எதிராக நாங்கள் தீவிரமாக போராடுவோம். அவரது முகத்திரையை கிழிப்போம் என்றார் அவர்.