அணு ஒப்பந்தம்: வெளிப்படையாக பிரச்சனைகள் இல்லை - ரைஸ்
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதன் பின்னணியில், கான்டலீசா ரைஸ் நேற்று 2 நாள் பயணமாக டெல்லி வந்தார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அவர் ஹைதராபாத் ஹவுஸில் சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பான 123 ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள அணு சக்தி சட்ட மசோதாவில் விரைவில் அதிபர் புஷ் கையெழுத்திட்டு அதை சட்டமாக்குவார் என்று ரைஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பான சில நிர்வாக நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் ரைஸ் தெரிவித்தார். இவை முடிந்தவுடன் 123 ஒப்பந்தத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திடுவர் என்றும் ரைஸ் தெரிவித்தார்.
ரைஸ் தொடர்ந்து பேசுகையில், இந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக எந்த வெளிப்படையான பிரச்சனைகளும் இல்லை. விரைவில் அதிபர் புஷ் சட்டத்தில் கையெழுத்திடுவார்.
இரு நாடுகளுக்கும் இடையே எந்தப் பிரச்சனையும் இருப்பதாக யாரும் நினைத்து விடக் கூடாது என விரும்புகிறோம். இவையெல்லாம் நிர்வாக ரீதியிலான விஷயங்கள்தான். விரைவில் இவை சரியாகி விடும்.
அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள சட்டத்தை வெள்ளை மாளிகைக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் அதிபர் கையெழுத்திடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் விரைவில் இது நடக்கும் என்றார் ரைஸ்.
இதற்கிடையே, அதிபர் புஷ், செவ்வாய்க்கிழமையன்று 123 ஒப்பந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது. அதன் பின்னர் மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அமெரிக்கா செல்வார். பின்னர் அங்கு வைத்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் என ஒரு தகவல் தெரிவிக்கிறது.