பிரபாகரன் வடக்கிலிருந்து தப்பி ஓட வாய்ப்பு: ராணுவ தளபதி
கொழும்பு: கிளிநொச்சியை ராணுவம் சுற்றி வளைத்துள்ள நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வடக்கிலிருந்து தப்பி ஓடும் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இலங்கை அரசின் சன்டே அப்சர்வர் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கிளிநொச்சியை ராணுவம் சுற்றி வளைத்து விட்டது. நகருக்குள் நுழைய இன்னும் 2 கிலோமீட்டர் தூரமே பாக்கி உள்ளது.
எனவே நீண்ட காலத்திற்கு தனது மறைவிடத்தில் பிரபாகரன் பதுங்கியிருக்க முடியாது. தனது போராட்டத்தை பிரபாகரன் இனியாவது கைவிட வேண்டும். ராணுவத்துடன் இனியும் அவர்களால் போரிட முடியாது. இதை அவர் உணர வேண்டும்.
அவர் தப்பி ஓடக் கூடிய வாய்ப்புகள் இல்லை என்று கூற முடியாது. அவர் தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளன. ஆனால் தன்னுடன் இருக்கும் வீரர்களை விட்டு விட்டு அவர் செல்வாரா என்று தெரியவில்லை. இருப்பினும் ராணுவத்திடம் சிக்க அவர் விரும்ப மாட்டார். எனவே நிச்சயம் தப்பிச் செல்ல முயலக் கூடும்.
இலங்கையை விட்டும் அவர் தப்பிச் செல்ல முயலலாம். அவருக்கு அடைக்கலம் கொடுக்க பல உலக அமைப்புகள் தயாராக உள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் தரப்பில் 11,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகள் ஆதிக்கம் இருந்த பகுதிகளில் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு ராணுவம் முன்னேறியுள்ளது.
தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பில் 4000 வீரர்களே உள்ளனர். எனவே விடுதலைப் புலிகள் இயக்கமும், பிரபாகரனும் தங்களது எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று கூறியுள்ளார் பொன்சேகா.