ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம்: 300 பாமகவினர் கைது
ராணிப்பேட்டை: நேற்று கைது செய்யப்பட்ட வாலாஜாபேட்டை பாமக நிர்வாகிகள் இருவரை விடுதலை செய்யக்கோரி அக்கட்சியைச் சேர்ந்த 300 பேர் இன்று ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு வாலாஜாபேட்டையில் பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசியவர்கள் முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் வீராசாமி, துரைமுருகன் ஆகியோரையும் எம்பி கனிமொழி, எம்எல்ஏ காந்தி ஆகியோரையும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து அன்றைய தினம் இரவே வாலாஜாபேட்டை திமுக நகர செயலாளரும், நகர மன்ற தலைவருமான நித்தியானந்தம் தலைமையில் அவைத் தலைவர் சுந்தர், நகர மன்ற உறுப்பினர்கள் சதீஷ்குமார், ரமேஷ், மோதிலால் நேரு, சரவணன், சுகந்தி உள்ளிட்டோர் தரக்குறைவாக பேசியவர்களை கைது செய்ய கோரி வாலாஜாபேட்டை பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வாலாஜாபேட்டை போலீசார் நேற்று மாலை நகர பாமக செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் பூண்டி மோகன் ஆகியோரை கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் இருவரையும் விடுதலை செய்யக் கோரியும் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலாளரும் ஆற்காடு எம்எல்ஏமான கே.எல்.இளவழகன் தலைமை வகித்தார்.
போலீஸ் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடந்ததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலூர் மாவட்ட செயலாளர் நந்தகுமார், தலைவர் ராஜரத்தினம், பொருளாளர் ஞானசவுந்தரி, நிர்வாகிகள் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.