பவானி ஆற்றில் தடுப்பணை கட்ட கேரளா திடீர் மும்முரம்
கோவை: பவானி ஆற்றின் குறுக்கே ஐந்து இடங்களில் தடுப்பணைகள் கட்ட கேரளா திடீர் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் கோவை, ஈரோடு மாவட்ட குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் உற்பத்தியாகி, அமைதிப் பள்ளத்தாக்கு வழியே, கேரளாவில் பாய்ந்து, அத்திக்கடவு வழியாக சேலம் மாவட்டத்திற்குள் ஓடுகிறது பவானி ஆறு.
இதில் கேரளாவுக்குள் ஓடும் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்ட கேரள அரசு கடந்த 2001ம் ஆண்டு முயற்சித்தது. அப்போது இருந்த அதிமுக அரசு இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றது.
இதையடுத்து வாலை சுருட்டிக் கொண்டிருந்த கேரளா தற்போது மீண்டும் தடுப்பணை கட்டும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே ஐந்து இடங்களில் தடுப்பணைகளை கட்ட ரூ. 4 கோடி நிதியை கேரள அரசு ஒதுக்கியுள்ளது.
சமீபத்தில் அம்மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து தற்போது முதல் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.
கேரளாவின் இந்தத் தடுப்பணை திட்டத்தால், கோவை, ஈரோடு மாவட்ட குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீராதாரம் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், அத்திக்கடவு - குன்னூர் -பில்லூர் கூட்டுக் குடிநீர்த் திட்டமும் பெரும் பாதிப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.