தமிழர்கள் பாதுகாப்பு: இலங்கை துணைத் தூதருக்கு இந்தியா கண்டனம்
இலங்கையில் கிளிநொச்சியிலும், பிற பகுதிகளிலும் இலங்கை படைகள் மிகக் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. விமானத் தாக்குதல்கள் தினசரி நடவடிக்கையாக மாறி விட்டன. இதனால், அப்பாவித் தமிழர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
2 லட்சம் தமிழர்கள் கிளிநொச்சியில் சிக்கித் தவிக்கின்றனர். பாதுகாப்பான இடங்களுக்கு ெசல்வதில் பெரும் சிரமத்தை அவர்கள் சந்தித்து வருகின்றனர்.
தமிழர்களை இலங்கை அரசு இனவெறியுடன் படுகொலை செய்து வருகிறது. இதை இந்தியா தட்டிக் கேட்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தமிழகம் தழுவிய மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டன.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை இனப் படுகொலையை தடுத்த நிறுத்த பிரதமர் தலையிட வேண்டும் என்று கோரி லட்சக்கணக்கில் தந்திகள் அனுப்புமாறு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து தமிழகத்திலிருந்தும், புதுவையிலிருந்தும் பெருமளவிலான தந்திகள் டெல்லிக்கு அனுப்பப்பட்டன.
இதைத் தொடர்ந்து நேற்று பிரதமர் மன்மோகன் சிங், முதல்வரைத் தொடர்பு கொண்டு பேசினார். இலங்கைத் தமிழர்களைக் காக்கவும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையின் தாக்குதலிலிருந்து காக்கவும் தேவையான நடவடிக்ைககளை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
இதையடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், இலங்கைக்கான துணைத் தூதர் பலிதகனேகோடாவை அழைத்து கடும் கண்டனம் தெரிவித்தார்.
அவர் இலங்கை துணைத் தூதரிடம் கூறுகையில், வடக்கில் நடந்து வரும் ராணுவ நடவடிக்கையின்போது மாபெரும் சுய கட்டுப்பாட்டை ராணுவம் கடைப்பிடிக்க வேண்டும் என இலங்கை அரசு வலியுறுத்த வேண்டும்.
ராணுவ நடவடிக்கையின் போது அப்பாவித் தமிழர்கள், நிரபராதிகள் பெருமளவில் உயிரிழப்பதாக வெளியாகும் செய்திகள் பெரும் கவலை அளிக்கிறது.
இலங்கையின் வடக்கில் நடந்து வரும் சம்பவங்கள் இந்தியாவுக்கு பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. சிறுபான்மையினர் மனதில் அச்ச நிலை உருவாவதை இலங்கை அரசு தடுக்க வேண்டும். அந்த நிலையை போக்கி, பெருமளவில் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் செல்வதில் எந்தத் தடையும் இல்லாமல் இலங்கை அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படும் செயலும் இந்தியாவுக்கு பெரும் கவலை அளிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வை மீறும் செயலாக உள்ளது.
இதுபோன்ற தாக்குதல்களை இலங்கை கடற்படை இனியும் மேற்கொள்ளக் கூடாது. மனிதாபிமான கண்ணோட்டத்துடனும், வாழ்வுரிமை கண்ணோட்டத்துடனும் இதை இலங்கை கடற்படை அணுக வேண்டும் என்றார் நாராயணன்.
ஒரு நாட்டைக் கண்டிக்க விரும்பினால் அந்த நாட்டின் தூதரை அழைத்துதான் எச்சரிப்பார்கள். ஆனால் இலங்கை தூதர் ஜெயசிங்கே டெல்லியில் இல்ைல என்று கூறப்பட்டது. இதையடுத்து துணைத் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கை தூதரை அழைத்து இந்தியா எச்சரிக்கை விடுத்திருப்பது பல காலங்களுக்குப் பிறகு இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.