அக். 22ம் தேதி சந்திராயன் விண்கலம் ஏவப்படுகிறது
ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து சந்திராயன்-1 ஏவப்படும். பி.எஸ்.எல்.வி.சி-11 ராக்கெட், சந்திராயனை விண்ணில் செலுத்தும். அன்று காலை 6.20 மணிக்கு ராக்கெட்டை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ. 386 கோடி மதிப்பில் சந்திராயன்-1 திட்டம் முடிவடைந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதுகுறித்த முதல் அறிவிப்பு வெளியானது என்பது நினைவிருக்கலாம்.
இந்தியாவின் விண்வெளி அத்தியாயத்தில் புதிய சகாப்தம் படைக்கும் சந்திராயன் விண்கலத்தை ஏவுவது பலமுறை தடைபட்டது. தற்போது நிலவுப் பயணத்திற்கு சந்திராயன் தயாராகி விட்டது.
சந்திராயன் விண்கலம் அனைத்தும் ஏற்கனவே ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. இந்த வார இறுதியில் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுடன் சந்திராயன் விண்கலம் இணைக்கப்படும்.
சந்திராயனுடன் 10 செயற்கைக் கோள்களும் உடன் செலுத்தப்படவுள்ளது. இதில் 5 இந்தியாவுனுடையது. மற்றவை ஐரோப்பா, அமெரிக்கா, பல்கேரிய நாடுகளுக்குச் சொந்தமானவை.
8 நாள் பயணத்துக்குப் பின்னர் நிலவை அடையும் சந்திராயன். அங்கு 2 ஆண்டு காலம் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். நிலவில் தரையிறங்கத் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்குவது தொடர்பான ஆய்வு உபகரணத்தையும் சந்திராயன் தன்னுடன் எடுத்துச் செல்கிறது.
நிலவின் மண் வளம் உள்ளிட்டவை குறித்து சந்திராயன் ஆய்வு செய்யவுள்ளது.