அணு சக்தி சட்டத்தில் நாளை கையெழுத்திடுகிறார் புஷ்
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான சட்ட மசோதாவுக்கு சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்தன. இதையடுத்து இந்த மசோதாவில் புஷ் கையெழுத்திட்டால் அது சட்டமாகி விடும். அதன் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
இந்த நடைமுறையை முடிக்க தாமதமாகி விட்டது. இந்த நிலையில் நாளை அதிபர் புஷ், சட்டத்தில் கையெழுத்திடுகிறார். வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் இதுதொடர்பான சட்டத்தில் புஷ் கையெழுத்திடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் உட் கூறுகையில், அதிபர் புஷ் எப்போது கையெழுத்திடுவார் என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை. இது நிர்வாக ரீதியிலான விஷயம் என்று ஏற்கனவே அமைச்சர் ரைஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய அரசு கவலையில் உள்ளதா என்பது குறித்தும் எனக்குத் தெரியாது.
இருப்பினும் இதில் கவலைப்பட ஏதும் இல்லை என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்.
ஒப்பந்தம் தொடர்பாக மிக மிக விரிவான முறையில் இந்திய அரசுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். ஒப்பந்தத்தின் அம்சங்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளோம். இந்தியாவும் ஒப்பந்த அம்சங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளது.
ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. இது இந்தியாவுக்கும், அமெரிக்காவும் மிகச் சிறந்த ஒப்பந்தமாகும் என்றார் உட்.
நாளை புஷ் கையெழுத்திட்டவுடன், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அமெரிக்கா வருவார். அவரும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸும், அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள். அதன் பின்னர் உடனடியாக ஒப்பந்தம் அமலுக்கு வரும்.