விழுப்புரத்தில் விஷமிகள் கைவரிசை: கல்லறைகள் மீது தாக்குதல்
விழுப்புரம்: விழுப்புரத்தில், கல்லறைத் தோட்டத்தில் புகுந்த ஒரு விஷமக் கும்பல், அங்கிருந்த கல்லறைகளில் வைக்கப்பட்டிருந்த சிலுவைகளை குறி வைத்து தாக்கி சேதப்படுத்தியதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஆங்காங்கே கிறிஸ்தவ ஆலயங்கள், பிரார்த்தனைக் கூடங்களில் விஷமிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் உள்ளது செயின்ட் சேவியர் கல்லறைத் தோட்டம். இங்கு நேற்று இரவு புகுந்த சிலர் அங்கிருந்த கல்லறைகளை அடித்து நொறுக்கினர். பின்னர் சிலுவைகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். மொத்தம் 21 கல்லறைகள் இதில் சேதமடைந்தன.
இதுகுறித்து கல்லறைத் தோட்ட நிர்வாகிகளில் ஒருவரான பிலோமின் தாஸ் கூறுகையில், சிலுவைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைப் பார்க்கும்போது மதக் கலவரத்தை தூண்டும் சக்திகள்தான் இதற்குப் பின்னணியில் இருக்க வேண்டும் என சந்தேகிக்கிறோம். விஷமிகள் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கல்லறைகள் தாக்கப்பட்ட தகவல் பரவியதும் அங்கு ஏராளமான பேர் திரண்டனர். இதையடுத்து அங்கு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.