உத்தபுரத்தில் தலித் பெண் மரணம் - கொலை என புகார்!
மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் இரு ஜாதியினருக்கிடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. அங்கிருந்த தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டதை அடுத்து தலித் மக்களுக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே அங்கு அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கோவில் சுவருக்கு வர்ணம் அடிப்பது தொடர்பாக இருதரப்புக்கும இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கலவரத்தை அடக்க போலீஸார் அவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசியும் கலைத்தனர்.
இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.
சிலர் தேடப்பட்டு வந்தனர். இதனால் உத்தரபுரத்தைச் சேர்ந்த ஆண்கள் போலீசாருக்கு பயந்து அருகில் உள்ள கிராமங்களிலும், மலை பகுதிகளிலும் தலைமறைவாக இருந்தனர்.
இந்நிலையில், தேடப்பட்ட வந்தவர்களில் கருப்பையா, பெரியகருப்பன், சின்னக்கருப்பன் ஆகியோர் சேடப்பட்டி பாலார்மலையில் மறைந்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
இதுவரை இந்த வழக்கில் 36 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
144 தடை உத்தரவு:
இந்த நிலையில், உத்தபுரத்தில் உள்ள முத்தாளம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி மீண்டும் மோதல் மூண்டு விடாமல் தடுப்பதற்காக அங்கு போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆயுதம் தாங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.
தலித் பெண் திடீர் மரணம்:
இந்த நிலையில் நேற்று இரவு சித்ரா என்ற தலித் வகுப்பைச் சேர்ந்த பெண் திடீரென மரணமடைந்தார். அவரை போலீஸார் அடித்து சித்திரவதை செய்ததால்தான் இறந்து போனதாக தாழ்த்தப்பட்டோர் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
ஊரில் ஆண்கள் யாரும் இல்லாததால், சித்ராவின் உடலை அடக்கம் செய்யும் பணியில், பெண்களே ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக உத்தபுரத்தில் பதட்டம் கூடியுள்ளது.