இந்தியா பெரும் விலையை கொடுக்கப் போகிறது: இடதுசாரிகள்
டெல்லி : இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தால், இந்தியா பெரும் விலையைக் கொடுக்க நேரிடும் என இடதுசாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த சட்டத்தில் அமெரிக்க அதிபர் புஷ் கையெழுத்திட்டுள்ளார். இதுகுறித்து சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கருத்து ெதரிவிக்கையில், அதிபர் புஷ் வெளியிட்டுள்ள அறிக்கை, ஒப்பந்தம் குறித்த இந்தியாவின் அச்சத்தை நீக்குவதாக இல்லை.
இந்த ஒப்பந்தம் தொடர்பான புரிந்துணர்வில், இந்திய, அமெரிக்க அரசுகளுக்கிடையே நிறைய இடைவெளி இருப்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது என்றார்.
சிபிஐ தேசிய செயலாளர் ராஜா கூறுகையில், 123 ஒப்பந்தம் ஹைட் சட்டத்தின் கீழ் தான் வரும், அமெரிக்காவின் இதர சட்டங்களுக்கு உட்பட்டது இது என்று அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இதை இந்திய அரசு மறுத்துக்கூறி வருகிறது.
இந்த நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இது முரண்பாடானதாகும்.
தனது ஆட்சியின் கடைசிக் காலத்தில் எந்த சாதனையையாவது காட்ட வேண்டும் என்ற வேகத்தில் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயன்றுள்ளார் மன்மோகன் சிங். அதேசமயம், அமெரிக்காவின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பொருளாதார சரிவு அங்கு ஆட்டிப்படைத்து வருகிறது. அதிலிருந்து மக்களை திசை திருப்ப இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அரசு அக்கறை காட்டியது.
அமெரிக்க அணு சக்தி நிறுவனங்கள் இந்தியாவில் குவிய காத்திருந்தன. இப்போது அணு சக்தி ஒப்பந்தம் அற்கு வழி வகுத்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தால், இந்தியாவுக்கு பொருளாதர ரீதியில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படப் போகிறது, இழப்பு, சுமை ஏற்படப் போகிறது என்று யாரக்கும் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இந்தியா பெரும் விலையை கொடுக்க நேரிடும் என்பதில் சந்தேகம் இல்லை. இது இந்தியாவின் எதிர்காலத்திற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றார்.