கடத்தப்பட்ட சிவபாலனுடன் என்.கே.கே.பி. ராஜா பேசிய பேச்சு லீக் ஆனது
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த தம்பதி பழனிச்சாமி-மலர்விழி, அவர்களது மகன் சிவபாலன், பழனிச்சாமியின் குகமணி ஆகியோர் கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதில் பழனிச்சாமி, மலர்விழி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி, அமைச்சர் ராஜாவின் தூண்டுதலின்பேரில் அவரது ஆட்கள் தங்களை கடத்தியதாக தெரிவித்தனர்.
மேலும் கடத்தப்பட்ட சிவபாலன் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். சொத்து அபகரிப்புக்காக கடத்தப்பட்டதாக நீதிமன்றத்திலும் மனித உரிமை ஆணையத்திலும் புகார் செய்தனர்.
இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததில் ராஜா அமைச்சர் பதவியை இழுந்தார். இது தொடர்பான வழக்கை விசாரிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து விசாரணை சூடுபிடித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 40 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கடத்தப்பட்ட சிவபாலன் இன்னும் ராஜாவின் ஆட்களின் பிடியில் இருப்பதாக குகமணியின் மைத்துனர் சுப்பிரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஒரு சிடி ஆதாரத்தை வெளியிட்டுள்ளார். அதில் சிவபாலனுடன், ராஜா உரையாடுவது இடம் பெற்றுள்ளது.
அந்த உரையாடல் விவரம் இதோ...
ராஜா: நான் ராஜா மாமா பேசுகிறேன். உனக்கு என்ன வேணும்
சிவபாலன்: நீங்க கொடுப்பது எனக்கு போதும். எங்க அம்மாதான் 6 ஏக்கர் கேட்கிறாங்க
ராஜா: ஏண்டா உங்க இடத்தை மட்டும் கேட்கிறீங்களா, இல்லை கிறிஸ்தவர்களுக்கான இடத்தையும் சேர்த்து கேட்கிறீங்களா, மற்றதை நேரில் பேசிக்கலாம்.
என்று இந்த உரையாடல் முடிகிறது. இதேபோல காஞ்சிகோவில் சின்னப்பன் என்பவர், சிவபாலனிடம் பேசும்போது, நம்ம டீலிங் விஷயம் நாலு பேரை தவிர வேற யாருக்கும் தெரிய வேண்டாம் என்கிறார்.
இந்த சிடி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.