அணு ஒப்பந்த சட்டம்: கையெழுத்திட்டார் புஷ்
இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான சட்ட மசோதாவுக்கு சமீபத்தில் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அதை சட்டமாக்க அதிபர் புஷ் கையெழுத்துக்கு அது அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கையெழுத்திடும் நிகழ்ச்சி அதிபர் மாளிகையின் கிழக்கு அறையில்நடந்தது. வெளியுறவு அமைச்சர் ரைஸ் உள்ளிட்டோர் புடை சூழ அதிபர் புஷ் சட்டத்தில் கையெழுத்திட்டார்.
பின்னர் புஷ் பேசுகையில், இந்த சட்டம், இரு நாட்டு அணு சக்தி பயன்பாட்ைட அதிகரிக்கும். சக்தி வாய்ந்த பொருளாதார நாடுகளாக இரு நாடுகளும் திகழ வழி வகுக்கும். இன்னும் நெருக்கமாக இரு நாடுகளும் இணைந்து செயல்பட வழி வகுக்கும்.
அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகள் முன்பை விட மேம்பட்டுள்ளன. சமீப காலத்தில், இரு நாடுகளும் உறுதியான நட்பை மேம்படுத்தியுள்ளன.
நாம் வளர்ந்திருப்பதைப் போலவே நமது எரிசக்தி தேவைகளும் வளர்ந்து விட்டன. பாதுகாப்பான, சுத்தமான எரிசக்தியை நாம் பெற வேண்டிய, உற்பத்தி செய்ய வேண்டிய கட்டத்தில் உள்ளோம். காற்றை மாசுபடுத்தாத அளவில் பெரிய அளவில் நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது.
எனது எட்டு கால ஆட்சியில் மிகச் சிறந்த வெளியுறவுக் கொள்கை சாதனையாக இந்த அணு சக்தி ஒப்பந்தத்தை கருதுகிறேன். பிரதமர் மன்மோகன் சிங் எனது மிகச் சிறந்த நண்பர். அமெரிக்காவும், இந்தியாவும் இயற்கையான நண்பர்கள் என்றார் அவர்.
கையெழுத்திடும் நிகழ்ச்சியின்போது துணை அதிபர் டிக் செனி, ரைஸ், எரிசக்தித் துறை அமைச்சர் சாமுவேல் போட்மேன், இந்தியத் தூதர் ரோனென் சென் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நாளை பிரணாப் - ரைஸ் கையெழுத்து
அதிபர் புஷ் சட்டத்தில் கையெழுத்திடுள்ளதைத் தொடர்ந்து நாளை பிரணாப் முகர்ஜியும், கான்டலீசா ரைஸும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளனர்.
இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான அணு சக்தி ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வரும்.