பொருளாதார சரிவு உலக நாடுகளின் தலைமை வங்கிகள் வட்டி குறைப்பு!
வாஷிங்டன்: உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் வரை குறைத்துள்ளன.
ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கியும் (ECB) இந்த வட்டி விகிதக் குறைப்பை அறிவித்துள்ளது. பெரும் சரிவுக்குள்ளாகியிருக்கும் சர்வதேச பொருளாதாரத்தைச் சீர்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருமந்தத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர உலக நாடுகள் தீவிர பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
அமெரிக்கா, கனடா மற்றும் இந்திய ரிசர்வ் வங்கிகள் நேற்று வங்கி வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் குறைத்துக் கொள்வதாக அறிவித்தன. இந்தக் குறைப்பின் மூலம் பொருளாதாரத்தில் கூடுதல் முதலீடு செலுத்தப்பட்டு, மந்த நிலை சீராகும் என நம்பப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளின் தலைமை வங்கிகள் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட முக்கிய ஆசிய நாடுகளின் தலைமை வங்கிகளும் இதே போன்ற நடவடிக்கையை எடுத்துள்ளன. இதன் மூலம் சர்வதேச அளவில் ஒரே மாதிரியான, நிலைத்த பொருளாதாரத் தன்மையை ஏற்படுத்த முடியும் என்றும் அவை நம்பிக்கைத் தெரிவித்துள்ளன.
கிடுகிடு வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சர்வதேச பங்குச் சந்தையை அந்த வீழ்ச்சியிலிருந்து மீட்டுக் கொண்டுவரவும் இந்த நடவடிக்கை உதவும் என நம்பப்படுகிறது.