சிஆர்ஆரைக் குறைத்தது ரிசர்வ் வங்கி: மேலும் ரூ.60,000 கோடி ரிலீஸ்!
மும்பை: நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சியை சமாளிக்கும் விதத்தில் ரூ.60 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதி இருப்பை வங்கிகள் கையாள அனுமதி அளித்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி.
இதற்காக வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை மேலும் ஒரு சதவிகிதம் குறைத்துள்ளது. இதுவரை 9 சதவிகிதமாக இருந்த சிஆர்ஆர் இப்போது 7.5 சதவிகிதமாக்கப்பட்டுள்ளது (பணவீக்கம் குறைந்ததால் கடந்த வாரம்தான் 0.5 சதவிகிதம் குறைக்கப்பட்டது).
வட்டி விகிதமும் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய நிறுவனங்களிலிருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் திரும்ப்ப் பெற்றுக் கொண்ட முதலீடு சரிகட்டப்படும் நிலை உருவாகும், பங்குச் சந்தை வீழ்ச்சியும் தடுக்கப்படும் என நம்புகிறது நிதியமைச்சகம்.
அரசின் இந்த முடிவை இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பு பெரிதும் வரவேற்றுள்ளது. முதலீட்டுக்குப் பாதுகாப்பு மட்டுமல்ல, வட்டி விகிதமும் குறைந்துள்ளது இந்திய தொழில் துறையின் கவலையைப் போக்கியுள்ளதாக இந்திய தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதேநேரம் உற்பத்தி சாராத பிரிவுகளுக்கு தரப்படும் கடன்களைக் குறைத்து, உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிக கடன்களை குறைந்த வட்டியில் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.