காஷ்மீர் முதல் ரயில் சேவை - தொடங்கி வைத்தார் மன்மோகன் சிங்
ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் முதல் ரயில் சேவையை பிரதமர் மன்மோகன் சிங் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காஷ்மீர் மக்களின் நீண்டகால கனவு இன்று நனவாகி உள்ளது. ஸ்ரீநகரில் இருந்து நவுகாம் செல்லும் ரயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த முதல் ரயில் சேவையை பிரதமர் மன்மோகன் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா, ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ், காஷ்மீர் ஆளுநர் வோரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ரயில் சேவை திட்டத்தை கடந்த 1998ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஐ.கே.குஜரால் தொடங்கி வைத்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இத்திட்டம் இன்றுதான் செயல்வடிவம் பெற்றுள்ளது.
முதல் கட்டமாக இந்த ரயில் பத்காம் மாவட்டம் ராஜ்வன்ஷெரில் இருந்து அனந்தநாக் வரையில் செல்லும். 66 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பயணத்துக்கு ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த ரயிலின் முதல் பயணத்தில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்று உற்சாகமாக பயணம் செய்தனர். இந்த ரயில் முறையான சேவையை நாளை முதல் தொடங்கும்.
8 பெட்டிகள் இந்த ரயிலில் இடம் பெற்றிருக்கும். பத்காம், ஸ்ரீநகர், பாம்பூர், காகபோரா, அவந்திபூரா, பன்ச்காம், பிஜ்பெஹரா, ராஜ்வன்ஷர் வழியாக இது அனந்தநாக்கை சென்றடையும்.