டாடா நானோ ஆலை திரும்பக் கோரி சிங்கூரில் போராட்டம்!
டாடா நிறுவனம் விட்டுச் சென்றுள்ள தொழிற்சாலையின் நுழைவாயிலில் 500 பேர் அமர்ந்து இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
விவசாயிகள் மற்றும் கட்டுமானப் பொருள் சப்ளையர்கள் அடங்கிய 22 பிரிவினர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிங்கூர் நானோ பாதுகாப்பு கமிட்டி என்ற பெயரில் இந்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.
இவர்கள் டாடாவின் நானோ ஆலை மீண்டும் சிங்கூருக்கு திரும்ப வேண்டும். குஜராத்துக்கு தொழிற்சாலையை மாற்றக் கூடாது என்று அவர்கள் கோருகின்றனர்.
மேலும் கைவிடப்பட்ட தொழிற்சாலையிலிருந்து இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல வரும் லாரிகளையும் வர வேண்டாம் என அவர்கள் தடுத்து நிறுத்தினர்.
விரைவில் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, முதல்வர் புத்ததேவ் பட்டச்சார்ஜி ஆகியோரை சந்திக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தசராவை நூதன முறையிலும் அவர்கள் கொண்டாடினர்.
பட்டாசுகள் நிரப்பப்பட்ட மமதா பானர்ஜி, சிங்கூர் விவசாயிகள் கமிட்டி ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரின் கொடும்பாவிகளை பட்டாசு வெடித்து அவர்கள் தசராவை கொண்டாடினர்.