ரூ.3000 லஞ்சம் பெற்ற சர்வேயர் கைது
திருச்சி: திருச்சி அருகே ரூ.3000 லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த இ.வெள்ளனூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். தனது நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வதற்காக தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனு புள்ளண்பாடி பகுதி சர்வேயர் துரைராஜ் என்பவரிடம் அளவை செய்வதற்காக அனுப்பப்பட்டது.
சர்வேயர் துரைராஜ், செல்வராஜின் நிலத்தை அளவை செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தார். இதையடுத்து கடந்த 7ம் தேதி சர்வேயர் துரைராஜை செல்வராஜ் சந்தித்து நிலத்தை அளந்து தரும்படி கேட்டார். அதற்கு ரூ.3000 லஞ்சம் கேட்டுள்ளார் துரைராஜ்.
இதைகேட்ட செல்வராஜ் அதிர்ச்சி அடைந்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் செய்தார். இதையடுத்து நேற்று மாலை டிஎஸ்பி அம்பிகாபதி தலைமையில் போலீஸார் லால்குடி தாசில்தார் அலுவலகத்தில் மறைந்திருந்து கண்காணித்தனர்.
போலீஸாரின் அறிவுரைப்படி செல்வராஜ் ரூ.3000த்தை சர்வேயர் துரைராஜிடம் கொடுத்தார். அதை துரைராஜ் வாங்கும்போது போலீஸார் அவரை சுற்றி வளைத்தனர். கையும் களவுமாக பிடிபட்ட துரைராஜை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து லஞ்ச பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 15 நாளில் போலீஸ் காவலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.