தொழிற்சாலைகளுக்கு டீசல் மீதான வாட் வரி வாபஸ்: கருணாநிதி
இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கை:
மாலை நேரங்களில் 6 மணி முதல் 10 மணி வரை வீடுகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வகை செய்யும் வகையில் இந்த நேரங்களில் பெரிய தொழிற்சாலைகள் தமிழ்நாடு மின்சார வாரியத்திலிருந்து மின்சாரத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று அண்மையில் ஆணையிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பெருந்தொழிற்சாலைகளின் உற்பத்தி பாதிக்காத வகையில் அவர்களுக்கு உதவும் பொருட்டு அவர்கள் வைத்துள்ள ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய ஏதுவாக தேவையான டீசல் வழங்குவது குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
முதல்வர் கருணாநிதி இது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிதினார். இதன் காரணமாக தொழிற்சாலைகளுக்குத் தேவையான கூடுதல் டீசலை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வழங்க மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இந்த டீசல் மதிப்புக் கூட்டு வரியும் சேர்த்து லிட்டர் ஒன்றுக்கு சுமார் ரூ.50 என்றுள்ளது. தற்போது பெட்ரோல் பங்குகளில் விற்கப்படும் டீசலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 37.13 என்று உள்ளது.
ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அதிக விலை டீசலைப் பயன்படுத்தும் பெரிய தொழிற்சாலைகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், இந்த டீசலின் மீதான மதிப்புக்கூட்டு வரியை தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் திருப்பியளிக்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.