இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது
வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சியில், இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களான கான்டலீசா ரைஸும், பிரணாப் முகர்ஜியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அறிவித்த அணு சக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.
வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை வளாகத்தில் உள்ள பெஞ்சமின் பிராங்க்ளின் அறையில் இந்த கையெழுத்திடும் வைபவம் இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு நடந்தது.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று அமெரிக்கா கிளம்பி வந்தார். 2 நாட்களுக்கு முன்புதான் இதுதொடர்பான சட்டத்தில் அதிபர் புஷ் கையெழுத்திட்டார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒப்பந்தத்தின் மூலம் 34 ஆண்டு காலமாக நிலவி வந்த அணுத் தனிமையிலிருந்து இந்தியா விடுபட்டுள்ளது. சமீபத்தில் பிரான்ஸ் அரசுடன் இதேபோன்ற ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.