பின்லாந்து முன்னாள் அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
பின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபர் மார்டி அதிஸாரி. சர்வதேச பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பல்வேறு நாடுகளில் அமைதி முயற்சியை கடந்த 30 ஆண்டுகளாக மார்டி மேற்கொண்டுள்ளார். அவரின் இந்த சேவையை பாராட்டி இந்தாண்டுக்கான சமாதான நோபல் பரிசு மார்டிக்கு வழங்கப்படுவதாக நார்வே நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.
71 வயதாகும் மார்டி ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கினார். 1960ம் ஆண்டு அரசியலில் இறங்கினார். 1973ல் தான்ஸானியாவுக்கான தூதரானார். 1994ம் ஆண்டு பின்லாந்து அதிபர் தேர்தலில் சமூக ஜனநாயக கட்சியில் மார்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேரடியாக தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபரானார்.
செர்பியாவுக்கும் அந்த ஒரு பகுதியான கொசொவாவுக்கும் இடையிலான பிரச்சனையில் சமரசம் செய்து வைப்பதற்காக கடந்த 2005ம் ஆண்டு ஐநாவின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தில் கொசொவாவுக்கு சாதகமாக மார்டி நடந்து கொள்வதாக செர்பியா குற்றம் சாட்டியது. மேலும் கொசொவாவுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று மார்டி சிபாரிசு செய்தார்.
இதை செர்பியா ஏற்காததால் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டு கொசாவா தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது. அதை உலக நாடுகள் வரவேற்றன.
அதே போல கடந்த 2005ம் ஆண்டில் இந்தோனேஷிய அரசுக்கும் அஸே மாகாண தீவிரவாதிகளுக்கும் இடையிலான சண்டையை தீர்த்து வைத்ததிலும் மார்ட்டியின் பங்கு முக்கியம் வாய்ந்ததாக இருந்தது. 30 ஆண்டுகளாக நீடித்த போர் சமாதானத்துக்கு வந்தது.
இவருடைய சிறந்த சேவையை பாராட்டி இந்தாண்டுக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நோபல் பரிசு மெடலும், ரூ.6.6 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது. டிசம்பர் 10ம் தேதி ஆஸ்லோவில் நடக்கும் விழாவில் நோபல் பரிசை மார்டி பெறுகிறார்.