பஜ்ரங் தளத்தை தடை செய்ய வேண்டும்: காங்.
டெல்லி: பஜ்ரங் தளம் அமைப்பு சில மாநிலங்களில் மத தீவிரவாதத்தை மேற்கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே அந்த அமைப்புக்கு தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.
டெல்லியில் பிரதமர் தலைமையில் மாநில முதல்வர்கள் கூடும் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பஜ்ரங் தளத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் எழுப்பியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்திப் பிரிவு தலைவர் வீரப்ப மொய்லி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரிசா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மத தீவிரவாதமாகும். இதை திட்டமிட்டு, மிக நேர்த்தியாக செய்து முடித்துள்ளது பஜ்ரங்தளம்.
இந்த செயல் குறித்து தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும். பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும் ஒரு அமைப்பை தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தால் தடை செய்ய முடியாது. அதேசமயம், மத தீவிரவாதம், தீவிரவாதம் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும்.
பஜ்ரங் தளத்தை தடை செய்வது குறித்து மத்திய அரசு மனதில் வைத்துள்ளது. மதவாதமும் கூட ஒரு வகையில் தீவிரவாதம்தான்.
சிமி அமைப்பை தடை செய்ய மாநில அரசுகள்தான் கோரிக்கை விடுத்தன. அதன்படி அது தடை செய்யப்பட்டது. ஆனால் பஜ்ரங்தளத்தின் வன்முறை குறித்து பாஜக ஆளும் மாநிலங்கள் இதுவரை அத்தகைய கோரிக்கையை விடுக்கவில்லை. அமைதி காக்கின்றன.
பஜ்ரங் தளத்தை தடை செய்ய தேவைப்படும் ஆதாரங்களை விட கூடுதல் ஆதாரங்கள் மத்திய அரசிடம் உள்ளன என்றார் மொய்லி.