நாளை தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம்
பிரதமர் தலைமையில் நாளை நடைபெறவுள்ள இந்த தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இக்கூட்டத்தில் நாடு முழுவதும் தலை விரித்தாடும் தீவிரவாத தாக்குதல்களை பெரிதாக எழுப்ப தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் திட்டமிட்டுள்ளனர். அதேபோல, பஜ்ரங்தளத்தின் கர்நாடகம், ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையை பெரிதாக கிளப்ப காங்கிரஸ் முதல்வர்கள் காத்துள்ளனர்.
மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலையும் குறி வைத்து எதிர்க்கட்சி மாநில முதல்வர்கள் கனை தொடுப்பார்கள் எனத் தெரிகிறது.
இவை தவிர அமர்நாத் நில விவகாரம் உள்ளிட்ட இதர பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் கடைசியாக கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது என்பது நினைவிருக்கலாம்.