இன்று தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் இன்று (அக்.13) கூடுகிறது. தீவிரவாத தாக்குதல்கள், சிறுபான்மையினர் மீதான பஜ்ரங் தளத்தின் தாக்குதல் குறித்து அனல் பறக்கும் விவாதம் நடைபெற உள்ளது.
பிரதமர் தலைமையில் இன்று நடைபெறவுள்ள தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
இக்கூட்டத்தில் நாட்டின் முக்கிய நகரங்களில்ல் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களை பெரிதாக எழுப்ப பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் திட்டமிட்டுள்ளனர். அதேபோல, பஜ்ரங்தளத்தின் கர்நாடகம், ஒரிசா மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலை கிளப்ப காங்கிரஸ் தரப்பு முதல்வர்கள் தயாராக உள்ளனர்.
இவை தவிர அமர்நாத் நில விவகாரம் உள்ளிட்ட இதர பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. மதக்கலவரம், தீவிரவாத ஒழிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த கூட்டத்தையொட்டி டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் கடைசியாக கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது என்பது நினைவிருக்கலாம்.