கூட்டுவதற்கு முன்பே தோற்ற அனைத்துக் கட்சி கூட்டம்! - சு.சாமி கிண்டல்
சென்னை: தமிழகத்தில் புலிகளை ஆதரிக்கும் கட்சிகளின் கூட்டமாகவே தற்போது திமுக மாறியுள்ளது. அனைத்துக்கட்சி கூட்டம் கூடுவதற்கு முன்னதாகவே தோல்வி அடைந்துவிட்டது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணி சாமி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை பிரச்சனை தொடர்பாக விவாதிக்க முதல்வர் கருணாநிதி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் கட்சிகளின் கூடாரமாகவே தற்போது திமுக மாறியுள்ளது என்று அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அது முற்றிலும் உண்மைதான்.
எனவே, முதல்வர் கூட்டியுள்ள இந்த அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே தோல்வி அடைந்து விட்டது.
இலங்கை பிரச்சனையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலக திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தயாராக இல்லை என்பதால் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் அவர்களது உறுதியற்ற தன்மையை பிரதிபலிப்பதாகவே அமையும்.
அனைத்துக் கட்சி கூட்டம் என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த வெளிநாட்டு தீவிரவாத அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மக்களின் பணம் வீணாக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் சாமி.